மோடியின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாஜக முதல்-மந்திரி எதிர்ப்பு


மோடியின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாஜக முதல்-மந்திரி எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 Jan 2020 10:35 AM GMT (Updated: 3 Jan 2020 10:35 AM GMT)

மோடியின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அசாம் முதல்-மந்திரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். எதிர்ப்பு தெரிவித்த முதல் பாஜக முதல்-மந்திரி இவர் ஆவார்.

கவுகாத்தி

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகும் முஸ்லீம் அல்லாத பிற மதத்தினரான இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர்,  ஜெயின் சமூகத்தினர், பார்ஸீஸ் இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர், 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில்,  குடியுரிமைச்சட்டம் 1955- ல் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.  கடந்த 2016-ஆம் ஆண்டு குடியுரிமைச்  திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

கடந்த மாதம்   மத்திய அரசு கொண்டு வந்த  குடியுரிமை திருத்த சட்ட மசோதா மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். கேரள முதலவர் பினராய் விஜயன் குடியுரிமைச்  திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.

இந்த நிலையில் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் ட்வீட் செய்ததைத் தொடர்ந்து,  குடியுரிமை திருத்த சட்டம் 2019 (சிஏஏ) பற்றிய விவாதத்தில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளது.

நேற்று  கவுகாத்தியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் வீடியோவை வெளியிட்டு  முதல்வர் சோனோவால் தனது ட்விட்டரில் : "அசாமின் மகன் என்ற முறையில் நான் ஒருபோதும் எனது மாநிலத்தில் வெளிநாட்டினரை குடியேற அனுமதிக்க மாட்டேன். இந்த சர்பானந்தா சோனோவால் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் ..." என கூறி உள்ளார்.


அசாம் முதலமைச்சர் குடியுரிமைச் திருத்த சட்டத்திற்கு எதிராக ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்தார், அவ்வாறு செய்த முதல் பாரதீய ஜனதா கட்சி முதல்வர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.

முதல்வர் சோனோவாலின் ட்வீட், மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 1 ந்தேதி அவரது ட்விட்டில் "அசாம் மற்றும் அசாமி சமூகம் மீதான எனது அர்ப்பணிப்பு என்றென்றும் அப்படியே இருக்கும். அசாம் மக்களின் ஆசீர்வாதத்துடன் நான் இந்த நிலத்திலிருந்து முதல்வராகி உள்ளேன். அதை ஒருபோதும் மறக்க மாட்டேன் நான் ஒரு தேசிய கட்சியில் இருந்தாலும் கூட. என ட்விட் செய்து இருந்தார்.


குடியுரிமைச் திருத்த சட்டத்திற்கு எதிராக அசாம் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களைத் தொடர்ந்து சோனோவால் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

ஏறக்குறைய ஐந்து தசாப்தங்களாக வங்காள தேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கி வரும் அனைத்து அசாம் மாணவர் ஒன்றியத்தின் (ஏஏஎஸ்யூ) தலைவராக முதல்வரின் அரசியல் பயணம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு மாதத்தில், சோனோவாலுக்கு எதிராக அனைத்து அசாம் மாணவர் ஒன்றிய தலைவர்களால் பல சந்தர்ப்பங்களில் கருப்பு கொடிகள் காட்டப்பட்டுள்ளன.

இன்று, ஒரு பாஜக முதல்வராக, சோனோவால் குடியுரிமைச் திருத்த சட்டத்தை ஆதரித்துள்ளார், இது 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்து ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்த இந்து வங்காள தேச குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை பெற அனுமதிக்கும்.

காங்கிரசின் செய்தி தொடர்பு பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சோனோவாலின் ட்வீட்டைப் பயன்படுத்தி மோடியைத் தாக்கி உள்ளார்.

ட்வீட்டை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் தலைவர் எழுதினார்: " பிரதமர், இந்தியாவை முட்டாளாக்குவதை நிறுத்துங்கள்! உங்கள் சொந்த முதல்வர் குடியுரிமைச் திருத்த சட்டத்தை பகிரங்கமாக எதிர்க்கிறார். இப்போது நீங்கள் அவரை 'தேசிய விரோதி' என்று அறிவிப்பீர்களா? எதிர்க்கட்சியை விமர்சிப்பதற்கு முன்பு அவரை பதவி நீக்கம் செய்ய முடியுமா என்று நான் சவால் விடுகிறேன்."என கூறி உள்ளார்.


 

இது குறித்து விளக்கம் கோரி இந்தியா டுடே தொலைக்காட்சி சார்பில் அவரை தொடர்பு கொண்டபோது, முதல்வர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Next Story