பால் தாக்ரே நினைவிடத்திற்காக மரங்கள் வெட்டப்படாது : மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்ரே


பால் தாக்ரே நினைவிடத்திற்காக மரங்கள் வெட்டப்படாது :  மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்ரே
x
தினத்தந்தி 11 Jan 2020 3:22 AM GMT (Updated: 11 Jan 2020 3:22 AM GMT)

பால்தாக்ரே நினைவிடத்திற்காக மரங்கள் வெட்டப்படாது என்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம்  அவுரங்காபாத்தில் உள்ள பிரியதர்ஷினி பூங்காவில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கு நினைவு சின்னம் கட்டப்பட உள்ளது. பூங்காவில் உள்ள 1,000 மரங்கள் இதற்காக வெட்டப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் சிவசேனாவை காட்டமாக சாடினார். 

மரங்கள் வெட்டப்படும் விவகாரத்தில் சிவசேனா வெளிவேஷம் போடுவதாகவும், தங்களது தேவைக்காக மரங்களை வெட்ட அனுமதிப்பது மன்னிக்க முடியாத பாவம் என்றும் விமர்சித்து இருந்தார். இதைத்தொடர்ந்து பால்தாக்கரே நினைவு சின்னம் அமைக்கும் பணிக்காக பிரியதர்ஷினி பூங்காவில் மரங்களை வெட்டக்கூடாது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.

இந்தநிலையில், பால்தாக்கரே நினைவுசின்னம் அமையும் பிரியதர்ஷினி பூங்காவிற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் இந்த பூங்காவில் ஒரு மரத்தை கூட வெட்ட மாட்டோம். அதற்கு பதிலாக இன்னும் அதிகளவில் மரங்களை நடப்போகிறோம்’ என்றார்.


Next Story