‘உடலில் கட்டியுள்ள குண்டுகளை வெடிக்கச்செய்வேன்’ - இளம்பெண் மிரட்டலால் அவசரமாக தரை இறங்கிய விமானம்


‘உடலில் கட்டியுள்ள குண்டுகளை வெடிக்கச்செய்வேன்’ - இளம்பெண் மிரட்டலால் அவசரமாக தரை இறங்கிய விமானம்
x
தினத்தந்தி 12 Jan 2020 8:29 PM GMT (Updated: 12 Jan 2020 8:29 PM GMT)

உடலில் கட்டியுள்ள குண்டுகளை வெடிக்கச்செய்வேன் என்ற இளம்பெண் மிரட்டலால் விமானம் ஒன்றுஅவசரமாக தரை இறங்கப்பட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 114 பயணிகளுடன் ‘ஏர் ஆசியா’ விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் அதில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், ‘ நான் உடலில் வெடிகுண்டு கட்டி உள்ளேன். எந்த நேரத்திலும் அதனை வெடிக்கச் செய்வேன்’ என விமான பணியாளர் ஒருவரிடம் தெரிவித்தார்.

இதுபற்றி உடனடியாக விமானிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானம் அவசரமாக தரை இறங்க அனுமதி கேட்டார். அதன்பின்பு அனுமதியின் பேரில் அந்த விமானம், விமான நிலையத்தில் தனியாக ஒரு இடத்தில் தரை இறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மிரட்டல் விடுத்த அந்த இளம்பெண்ணிடம் சோதனை யிட்டபோது, அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.

விசாரணையில் அந்த பெண் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்பதும் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதுபற்றி அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story