நடிகை தீபிகா படுகோனேவின் படத்தை புறக்கணிப்பது தவறானது - சிவசேனா சொல்கிறது


நடிகை தீபிகா படுகோனேவின் படத்தை புறக்கணிப்பது தவறானது - சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 12 Jan 2020 9:19 PM GMT (Updated: 12 Jan 2020 9:19 PM GMT)

டெல்லி மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை தீபிகா படுகோனேவின் படத்தை புறக்கணிப்பது தவறானது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை,

டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் நடிகை தீபிகா படுகோனே பல்கலைக்கழகத்திற்கே சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், தாக்குதல் சம்பவத்துக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டத்திலும் கலந்துகொண்டார்.

தீபிகா படுகோனேவின் இந்த துணிச்சலை பலரும் பாராட்டினர்.

அதே நேரத்தில் பலர் தீபிகா படுகோனேவுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.

அவர் நடித்துள்ள ‘சப்பாக்’ படத்தின் விளம்பரத்துக்காக இப்படி செய்வதாக விமர்சித்தனர். அந்த படத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டனர். அத்துடன் ‘சப்பாக்’ படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்து அதை ரத்து செய்த புகைப்படத்தையும் வெளியிட்டனர்.

இந்த விவகாரத்தில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நடிகை தீபிகா படுகோனேவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவரது படத்தை புறக்கணிக்க வேண்டும் என்பது தவறானது. நாட்டை ‘தலிபான்’ பாணியில் இயக்க முடியாது, என்றார்.

Next Story