டெல்லியில் ஜனாதிபதி மாளிகை அருகே பிரதமருக்கு இல்லம்: அரசு அலுவலகங்களுக்கு ஒரே செயலகம் கட்ட திட்டம்


டெல்லியில் ஜனாதிபதி மாளிகை அருகே பிரதமருக்கு இல்லம்: அரசு அலுவலகங்களுக்கு ஒரே செயலகம் கட்ட திட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2020 11:00 PM GMT (Updated: 12 Jan 2020 10:15 PM GMT)

டெல்லியில் மத்திய அரசின் அலுவலகங்களுக்கு ஒரே செயலகம் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை அருகே துணை ஜனாதிபதி, பிரதமருக்கான வீடுகள் கட்டப்படுகின்றன.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வாடகை என்றவகையில் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி செலவாகிறது. எனவே, வாடகை கட்டிடங்களை தவிர்த்து விட்டு, சொந்த கட்டிடத்தில் இயங்கும் வகையில் பொதுவான மத்திய செயலகத்தை கட்ட மத்திய அரசு திட்டம் தீட்டி உள்ளது.

அதுமட்டுமின்றி, முக்கிய அலுவலகங்களை முற்றிலும் மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, துணை ஜனாதிபதி இல்லம், மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவன், நிர்மாண் பவன், கிரிஷி பவன், விஞ்ஞான் பவன் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட உள்ளன.

அங்கு செயல்பட்டு வந்த அலுவலகங்களுக்காக மத்திய செயலகம் கட்டப்படுகிறது. இது, அனைத்து அமைச்சகங்களுக்கும் பொதுவான ஒன்றாக இருக்கும். இதுதவிர, முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது. தற்போதைய நாடாளுமன்றத்துக்கு அருகிலேயே புதிய நாடாளுமன்றம் அமையும்.

மேலும், ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான ராஜபாதையின் 3 கி.மீ. தூர பகுதி முற்றிலும் நவீனமயமாக மாற்றி அமைக்கப்படும். ஜனாதிபதி மாளிகை அருகிலேயே துணை ஜனாதிபதி வீட்டையும், பிரதமர் வீட்டையும் மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்த பிரமாண்ட திட்டத்துக்கான செயல் திட்டத்தை மோடி அரசு தயாரித்து உள்ளது. இதற்கு கட்டுமான பணி ஆலோசகராக குஜராத்தை சேர்ந்த எச்.சி.பி. டிசைன்ஸ் என்ற கட்டிடக்கலை வடிவமைப்பு நிறுவனம் டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம், கட்டிட வடிவமைப்பு, திட்ட மதிப்பீடு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு, வாகன நிறுத்த வசதிகள் உள்ளிட்டவை குறித்த திட்டங்களை தயாரிக்கும். இதற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.229 கோடியே 75 லட்சம் ஊதியமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மேற்கொள்ளும். ஒவ்வொரு கட்டுமான பணிக்கும் அடுத்த மாதம் டெண்டர் விடுகிறது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த செலவு ரூ.12 ஆயிரத்து 879 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

புதிய நாடாளுமன்றம், ஆயிரம் முதல் 1,200 பேர்வரை அமரும் வசதியுடன் கட்டப்படுகிறது. இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குள், அதாவது 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குள் புதிய நாடாளுமன்றம் தயாராகி விடும்.

பொதுவான மத்திய செயலகம், 2024-ம் ஆண்டுக்குள் தயாராகி விடும். நவீனமயமாக்கப்பட்ட ராஜபாதை, 2022-ம் ஆண்டுக்குள் தயாராகி விடும்.

இதற்கிடையே, புதிதாக அமைய உள்ள கட்டிடங்களில் ஊழியர்களுக்கான தேவைகளை இறுதி செய்யும் பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அதற்காக, ஒவ்வொரு அமைச்சகத்திலும் பணியாற்றும் ஊழியர்களின் விவரங்களை அளிக்குமாறு மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா, அனைத்து துறை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். வருகிற 15-ந் தேதிக்குள் இந்த விவரங்களை அளிக்குமாறு அவர் கூறியுள்ளார்.

தகவல்களை சேகரிக்க ஒவ்வொரு அமைச்சகத்திலும் இணை செயலாளர் அந்தஸ்தில் ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.


Next Story