சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை: குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம்


சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை: குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம்
x
தினத்தந்தி 13 Jan 2020 11:30 PM GMT (Updated: 13 Jan 2020 8:46 PM GMT)

சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், அகமது பட்டேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு டி.ராஜா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன், லோக் ஜனதாதளம் சரத் யாதவ், ராஷ்டிரீய லோக் சமதா கட்சி உபேந்திர குஷாவா, ராஷ்டிரீய ஜனதாதளம் மனோஜ் ஜா, தேசிய மாநாடு கட்சி ஹஸ்னைன் மசூதி உள்பட 20 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அதேசமயம் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துவிட்டன.

கூட்டத்தில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் அதேசமயம் தங்களது போராட்டத்துக்கும் மாணவர்களின் ஆதரவை பெற வேண்டும் என்று பல கட்சிகள் வலியுறுத்தின. எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சோனியா காந்தி பேசும்போது, “பிரதமரும், உள்துறை மந்திரியும் மக்களுக்கு தவறான தகவலை தெரிவிக்கிறார்கள். அவர்களே ஒரு வாரத்துக்கு முன்பு மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மோடி அரசு தனது திறமையின்மையை வெளிப்படுத்திவிட்டது. இந்தியாவில் இப்போதைய உண்மையான பிரச்சினை பொருளாதார வீழ்ச்சிதான். அதை சரிசெய்வதற்கு பிரதமரிடம் பதில் இல்லை. எனவே நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்ப இந்த பிரிவினை பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார்கள்” என்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகிய மூன்றும் அரசியல்சாசனத்துக்கு விரோதமானது. குறிப்பாக இவை ஏழை, அடித்தட்டு மக்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மொழி மற்றும் மதம் ரீதியான சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரானது.

தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு தேசிய மக்கள்தொகை பதிவேடுதான் அடிப்படை. எனவே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. ஆகியவற்றுக்கு கணக்கெடுக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தை புறக்கணித்தது குறித்து மாயாவதி கூறும்போது, “ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு பகுஜன் சமாஜ் வெளியில் இருந்து ஆதரவு தருகிறது. ஆனால் எங்கள் எம்.எல்.ஏ.க்களை இரண்டாவது முறையாக காங்கிரசில் இணைக்க முயற்சி நடந்துள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்றால் எங்கள் தொண்டர்கள் விரக்தி அடைந்துவிடுவார்கள்” என்றார்.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய்சிங், “இந்த கூட்டம் பற்றி ஆம் ஆத்மிக்கு தகவல் இல்லை, அதனால் அதில் கலந்துகொள்வதில் அர்த்தம் இல்லை” என்றார். ஆனாலும் டெல்லி சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.


Next Story