குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு மனு


குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என  அறிவிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு மனு
x
தினத்தந்தி 14 Jan 2020 5:47 AM GMT (Updated: 14 Jan 2020 5:47 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டை கேரள அரசு நாடி உள்ளது.

புதுடெல்லி

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாநில சட்டசபையில்  சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தீர்மானத்தை கொண்டு வந்தார். குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாக அந்த தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

பினராயி விஜயன் கொண்டு வந்த இந்த தீர்மானம், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.  பா.ஜனதாவின் ஒரே உறுப்பினரான ராஜகோபால் மட்டுமே இந்த தீர்மானத்தை எதிர்த்து பேசினார்.

இதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்று இருக்கிறது.

தற்போது குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடிய முதல் மாநிலமாக கேரள அரசு மாறியுள்ளது. குடியுரிமை (திருத்த) சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டை  அணுகியுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 131-வது பிரிவின் கீழ் கேரள அரசு இந்தமனுவை தாக்கல் செய்து உள்ளது. அரசியலமைப்பின் கீழ், மத்திய அரசின்  அதிகாரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அல்லது ‘தடைசெய்யும்’ எந்த நடவடிக்கையும் எடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம்  இல்லை. எந்த சட்டங்களை செயல்படுத்த வேண்டும், அவை எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசே மாநிலங்களுக்கு சொல்கிறது.

எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 131-வது பிரிவின் கீழ், மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான எந்தவொரு தகராறுக்கும் இடையில் காலடி எடுத்து வைக்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குடியுரிமை  திருத்த சட்டம்  14 (சமத்துவ உரிமை), 21 (வாழ்க்கை உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம்), மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 25 (மத சுதந்திரம்) மற்றும் மதச்சார்பின்மையின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் கொள்கைகளை மீறுவதாகும். ஆகவே குடியுரிமை (திருத்த) சட்டம்  அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி கேரள அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

Next Story