நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை: 2 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை: 2 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 14 Jan 2020 9:02 AM GMT (Updated: 14 Jan 2020 8:31 PM GMT)

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் 6 பேர் கும்பலால் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ராம்சிங் என்பவன் திகார் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டான். மற்றொருவன் சிறுவன் என்பதால், 3 ஆண்டு சிறை தண்டனைக்குப்பின் விடுதலை செய்யப்பட்டான்.

மீதமுள்ள முகேஷ் குமார் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றமும், டெல்லி ஐகோர்ட்டும் விதித்த இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டும் கடந்த 2017-ம் ஆண்டு உறுதி செய்தது. பின்னர் இதில் 3 பேர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவும் 2018-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடக்கோரி, டெல்லி கோர்ட்டில் நிர்பயாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த கோர்ட்டு வருகிற 22-ந்தேதி காலை 7 மணிக்கு 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வாரண்டு பிறப்பித்து உள்ளது.

அதன்படி 4 பேரையும் ஒரே நேரத்தில் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. 4 பேரின் உடல் எடைக்கு சமமான பொம்மைகள் செய்து தூக்கில் போடும் பணிகளுக்கான ஒத்திகை நடத்தப்பட்டு உள்ளது. மேலும் அவர்களின் மனநிலையை பரிசோதிப்பதற்காக அவர்களுடன் சிறை அதிகாரிகள் தொடர்ந்து உரையாடி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த குற்றவாளிகளில் வினய் சர்மா, முகேஷ் குமார் ஆகிய இருவரும் தண்டனைக்கு எதிராக கடந்த 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். தங்கள் தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் அந்த மனுக்களில் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகிய 5 பேர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. இந்த விசாரணை திறந்த கோர்ட்டில் இல்லாமல், நீதிபதிகளின் அறைக்குள்ளேயே நடந்தது. விசாரணையின் போது எந்த தரப்பு வழக்கறிஞரும் அனுமதிக்கப்படவில்லை.

விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் இருவரின் மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற குற்றவாளிகளின் கோரிக்கையையும் நிராகரித்தனர்.

தூக்கு தண்டனை கைதி ஒருவரின் கடைசி சட்ட போராட்டமே இந்த சீராய்வு மனுதான். தற்போது இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால், இந்த குற்றவாளிகள் இருவரும் வரும் 22-ந் தேதி தூக்கில் இடப்படுவது பெரும்பாலும் உறுதியாகி உள்ளது.

Next Story