சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி


சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி
x
தினத்தந்தி 16 Jan 2020 12:15 AM GMT (Updated: 16 Jan 2020 12:15 AM GMT)

சிஏஏ விவகாரம் தொடர்பாக பா.ஜனதா மற்றும் காங்கிரசை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது 64வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியின் பாதையையே பின்பற்றி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியைப் போலவே பா.ஜனதாவும் மக்கள் நலனையும் தேசிய நலனையும் ஒதுக்கி வைத்துள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை அரசியல் ஆதாயங்களுக்காக தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

அரசாங்கத்தின் தவறான கொள்கைள் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை சீர்குலைய வழிவகுத்துள்ளன. வறுமை, வேலை வாய்ப்பின்மை, வன்முறைகள் ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட தற்போது அதிகமாகிவிட்டன. நாட்டினுடைய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவில் குற்றவாளிகள் உள்ளனர். ஆனால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

நான் ஆட்சியிலிருந்தபோது எனது கட்சியிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளேன். குடியுரிமை திருத்தச் சட்டம் சமூகத்தில் ஒரு பிரிவினை அந்நியப்படுத்துகிறது என்பதை எங்களுடைய கட்சி நம்புகிறது. நாங்கள் அதை எதிர்க்கவில்லை என்று கூறுவது பொய். சில கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் பொய்களை பரப்பும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் அரசாங்கத்தால் ஒடுக்கப்படுவதில்லை. குற்றம் மற்றும் அட்டூழியங்கள் யாருக்கும் எதிராக நடக்கலாம். எனவே, மத்திய அரசு சிஏஏவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதை திரும்பப் பெற வேண்டும். ஒருமித்த கருத்து ஏற்பட்டபிறகே ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

பகுஜன் சமாஜ்தான் முதன்முதலில் சிஏஏ சட்டத்தை எதிர்த்தது. நாங்கள் அமைதியான முறையில் எதிர்த்தோம். நாங்கள் உரிய அனுமதி பெற்று அமைதியான போராட்டங்களை மட்டுமே நடத்துவோம். எங்கள் கட்சி பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகத்தான் பார்க்கிறது” என்று கூறினார்.

Next Story