நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் ; 22-ந் தேதி தூக்கு உறுதியானது


நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் ; 22-ந் தேதி தூக்கு உறுதியானது
x
தினத்தந்தி 17 Jan 2020 7:28 AM GMT (Updated: 17 Jan 2020 7:28 AM GMT)

நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சக பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கருணை மனுவை நிராகரித்து உள்ளார்.

புதுடெல்லி, 

டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில்  குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கோர்ட்டு விதித்த இந்த  தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22–ந்தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்கில் போட வேண்டும் என விசாரணை கோர்ட்டு கடந்த 7–ந்தேதி மரண வாரண்டு பிறப்பித்தது. இதற்காக திகார் சிறையில் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்த மனுவை பரிசீலித்து வந்த உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என அறிவித்து  இருந்தது. அதன்படி நேற்று இரவு உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தது.

இதைத் தொடர்ந்து  இன்று ஜனாதிபதி, குற்றவாளி முகேஷ் குமார் சிங் கருணை மனுவை நிராகரித்தார். இதனால்  வரும் 22-ந் தேதி நிர்பயா குற்றவாளிகளின்  தூக்கு  தண்டனை நிறைவேறும் என்பது  உறுதியாகி உள்ளது.

முகேசின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சக பரிந்துரையை ஏற்று ராம்நாத் கோவிந்த் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.

Next Story