பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்


பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
x
தினத்தந்தி 17 Jan 2020 11:30 PM GMT (Updated: 17 Jan 2020 11:10 PM GMT)

20-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில், பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்த அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்திய உள்துறை மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் அவர் வகித்து வந்த அகில இந்திய பாரதீய ஜனதா கட்சி தலைவர் பணியை குறைக்கும் வகையில், அக்கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்தியமந்திரி ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார்.

தற்போது செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவை கட்சியின் அகில இந்திய தலைவராக்கப்படுகிறார். இதற்கான பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்சியின் மூத்த தலைவரும் கட்சியின் தேசிய தேர்தல் பிரிவு பொறுப்பாளருமான ராதா மோகன் சிங் நேற்று அறிவித்தார்.

அதன்படி 20-ந்தேதி அகில இந்திய பாரதீய ஜனதா கட்சி தலைவருக்கான வேட்புமனு தாக்கல் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும். இதில் போட்டியிடுபவர்களின் மனு தாக்கல் பகல் 1.30 மணி அளவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்து உள்ளார். கட்சியின் மாவட்ட மற்றும் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் அவரை தவிர வேறு யாரும் போட்டியிடமாட்டார்கள் என தெரிகிறது. எனவே அவர் போட்டியின்றி அகில இந்திய பாரதீய ஜனதா கட்சி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.


Next Story