சாவர்க்கரை எதிர்ப்பவர்களை இரண்டு நாட்கள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - சஞ்சய் ராவத் கருத்து


சாவர்க்கரை எதிர்ப்பவர்களை இரண்டு நாட்கள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - சஞ்சய் ராவத் கருத்து
x
தினத்தந்தி 18 Jan 2020 1:54 PM GMT (Updated: 18 Jan 2020 1:54 PM GMT)

சாவர்க்கரை எதிர்ப்பவர்களை இரண்டு நாட்கள் அந்தமான் சிறையில் அவர் இருந்த அறையில் அடைக்க வேண்டும் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மும்பை,

சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறிய போது, "சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கோரினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால் நாங்கள் (காங்கிரஸ்) அதை எதிர்ப்போம். சாவர்க்கரின் வாழ்க்கை சர்ச்சைக்குரியது" என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"நாங்கள் எப்போதுமே வீர சாவர்க்கருக்கான மரியாதையைக் கோருகிறோம். வீர சாவர்க்கரை எதிர்ப்பவர்கள் எந்த கொள்கையுடையவர்களாக இருந்தாலும் சரி, எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் இரண்டு நாட்கள் அடைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவருடைய தியாகம் மற்றும் நாட்டுக்கான அவரது பங்களிப்பு குறித்து அவர்களுக்குப் புரியும்.

சாவர்க்கர் தனது வாழ்க்கையில் 14 ஆண்டுகளை அச்சம் தரக் கூடிய அந்தமான் சிறையில் கழித்தார். எனவே, இதற்காக அவர் கௌரவிக்கப்பட வேண்டும் என்பது எப்போதுமே சிவசேனாவின் நிலைப்பாடாகும்" என்று கூறினார்.

Next Story