6ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; 2 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு
மராட்டியத்தில் 6ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டியத்தின் நான்டெட் நகரில் மரத்வாடா பகுதியில் அமைந்த பள்ளியொன்றில் 6ம் வகுப்பில் மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார். அவரிடம் கலாசார நிகழ்ச்சி பற்றிய வீடியோ ஒன்றை காட்டுகிறோம் என கூறி ஆசிரியர்கள் அறை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால், மாணவிக்கு சிறார் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் காயமடைந்த மாணவியை பள்ளிக்கு அருகில் தூக்கி போட்டு விட்டு சென்றுள்ளனர். இதன் பின் மகளை தேடி வந்த பெற்றோர் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் தேறி வருகிறார்.
இந்த சம்பவம் பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவியின் தாயார் முதலில் புகார் தெரிவித்து உள்ளார். ஆனால், நடந்த குற்ற சம்பவம் பற்றி பேச கூடாது என அறிவுறுத்தியதுடன், போலீசாரிடம் புகார் அளிக்க கூடாது என்று கட்டாயப்படுத்தி உறுதிமொழி வாங்கி உள்ளனர்.
இதன்பின் நடந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார் மாணவியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2 ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் 3 கூட்டாளிகள் என 5 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story