அயோத்தியில் 3 மாதத்தில் ராமர் கோவில் கட்டப்படும்: அமித்ஷா உறுதி


அயோத்தியில் 3 மாதத்தில் ராமர் கோவில் கட்டப்படும்: அமித்ஷா உறுதி
x
தினத்தந்தி 21 Jan 2020 10:23 AM GMT (Updated: 21 Jan 2020 9:57 PM GMT)

அயோத்தியில் 3 மாதங்களுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் என்று அமித்ஷா உறுதி அளித்தார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசியதாவது:-

அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய காங்கிரஸ் தலைவர்கள் கூட அயோத்தி வழக்கின் தீர்ப்பை கேட்கவில்லை. இது அவர்களது ராமர் கோவில் பற்றிய உண்மையான புரிதலை காட்டுகிறது. ஆனால் கோர்ட்டு தனது தீர்ப்பை வெளியிட்டுவிட்டது. எனவே இப்போது பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும்.

இப்போதும் காங்கிரஸ் அரசு இருந்தால் இந்த கோவிலை கட்டுவதற்கு அவர்கள் அனைத்து வகையிலும் இடையூறு செய்வார்கள். ஆனால் நான் இப்போது உறுதி அளிக்கிறேன், 3 மாத காலத்தில் வானுயர்ந்த ராமர் கோவில் கட்டப்படும்.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களை குழப்ப முயற்சிக்கின்றன. இந்த புதிய சட்டம் குடியுரிமை வழங்குவதற்கு மட்டுமே, பறிப்பதற்காக அல்ல. மோடி குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவந்ததும் உண்மையை தெரிந்துகொள்ளாமல் ராகுல் காந்தியும், அவரது கூட்டணியினரான மம்தா, அகிலேஷ், மாயாவதி என ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் குரலை எழுப்புகின்றன.

அந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியவன் நான்தான், எனவே நான் சவால் விடுக்கிறேன். யார் வேண்டுமானாலும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து என்னுடன் விவாதிக்கலாம். எக்காரணம் கொண்டும் இந்த சட்டத்தை திரும்பப்பெற முடியாது. எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்பி வருவதால் அதற்கு எதிராக நாங்கள் இந்த விழிப்புணர்வு கூட்டங்களை நடத்திவருகிறோம்.

1947-ல் மத அடிப்படையில் இந்த நாடு பிரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பு. இப்போது நாங்கள் அந்த தவறை திருத்த முயற்சிக்கிறோம், அவர்கள் எதிர்க்கிறார்கள். மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி கூட இதை கூறியிருக்கிறார்கள். ஆனால் இப்போது அந்த கட்சி எதிர்ப்பது துரதிர்ஷ்டவசமானது. இது அவர்களது இரட்டை நிலைப்பாட்டை காண்பிக்கிறது என்று அமித்ஷா பேசினார்.


Next Story