பிரதமர் மோடியுடன் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு


பிரதமர் மோடியுடன் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு
x
தினத்தந்தி 23 Jan 2020 7:45 AM GMT (Updated: 23 Jan 2020 7:45 AM GMT)

டெல்லியில் பிரதமர் மோடியை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா கடந்த 5½ ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் பா.ஜனதா கட்சி சில பின்னடைவுகளை தவிர, பெரும்பாலான தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கோட்பாடு பின்பற்றப்படுகிறது.

மோடி அரசில் அமித்ஷா உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரியும், கட்சியின் முன்னணி தலைவருமான ஜே.பி.நட்டா கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. 
தற்போது செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவை தலைவராக நியமிக்க அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின்கட்காரி உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிந்து மனு தாக்கல் செய்தனர். ஜே.பி.நட்டாவை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை. இதனால் ஜே.பி.நட்டா பா.ஜனதா கட்சியின் 14-வது தேசிய தலைவராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா சந்தித்து பேசினார்.  பிரதமரை சந்தித்த பின் ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றேன். அவரது திறமையான தலைமையின் கீழ் நாடு புதிய உச்சங்களை தொடுகிறது. அவரது மதிப்புமிக்க வழிகாட்டுதலுடன், நான் கட்சியை அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story