அமித்ஷா மீது பிரியங்கா காந்தி தாக்கு: போராட்டக்காரர்களை அடைத்து வைத்து சவால் விடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்


அமித்ஷா மீது பிரியங்கா காந்தி தாக்கு: போராட்டக்காரர்களை அடைத்து வைத்து சவால் விடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 8:27 PM GMT)

அரசியல் கட்சி தலைவர்களுக்கு சவால் விடுத்த விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷாவை விமர்சித்துள்ள பிரியங்கா காந்தி ‘போராட்டக்காரர்களை அடைத்து வைத்து சவால் விடுவதே வழக்கமாக கொண்டு உள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.

லக்னோ,

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் நடந்த பேரணியில் பங்கேற்ற பா.ஜ.க., மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா பேசுகையில், ‘குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி ஆகியோர் என்னுடன் பொதுமேடையில் விவாதம் நடத்த தயாரா?’ என சவால் விடுத்தார்.

அவரது சவால் அரசியல் கட்சி தலைவர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அமித்ஷா விடுத்த சவாலை அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் வலைத்தளபக்கத்தில் ‘தனக்கு எதிராக போராட முடியாதவர்களை குறிவைத்து சவால் விடுவதையே அமித்ஷா வழக்கமாக வைத்துள்ளார்’ என்று விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் இந்தி சினிமா படத்தின் பாடல் வரிகளையும் அதில் அவர் மேற்கோள் காட்டினார்.

மேலும் அதில் அவர் கூறுகையில், தனக்கு எதிராக போராடுபவர்களை வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அடைத்து வைத்து அவர்களுக்கு எதிராக அமித்ஷா சவால் விடுகிறார் என காஷ்மீர் பிரச்சினை குறித்து மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது முதல் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும், டுவிட்டர் வலைத்தளம் மூலமும் பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக அவ்வப்போது பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story