பயனற்ற ஆழ்துளை கிணற்றை மழைநீர்சேமிப்புக்கு பயன்படுத்தும் யோசனை - தமிழகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு


பயனற்ற ஆழ்துளை கிணற்றை மழைநீர்சேமிப்புக்கு பயன்படுத்தும் யோசனை - தமிழகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 26 Jan 2020 2:51 PM GMT (Updated: 26 Jan 2020 2:51 PM GMT)

பயனற்ற ஆழ்துளை கிணற்றை மழைநீர்சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதியயோசனை தமிழகத்தில் உதித்துள்ளது என்று பிரதமர் மோடி மான் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார். 

அதன்படி குடியரசு தினமான இன்று, 2020 ஆம் ஆண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். இன்றைய நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது;-
 
“2020 ஆம் ஆண்டில் முதல்முறையாக மன் கி பாத் மூலம் மக்கள் முன்னிலையில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் இனிய குடியரசுத் தின வாழ்த்துக்கள். 

மன் கி பாத் மூலம் நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிஹு, பொங்கல் மற்றும் லோஹ்ரி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. அதே வேளையில் ப்ரூ-ரியாங் இன மக்களுக்கு நிரந்தர இருப்பிடம் வழங்கப்பட்டது. 

வரும் பிப்ரவரி மாதம் 22-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை, ‘கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்’ கட்டாக் மற்றும் புவனேஸ்வரில் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விளையாட்டு துறை வேகமாக வளரும். இதனால் தேசிய அளவில் புதிய விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். புதிய திறமைகள் கொண்ட வீரர்கள் நாட்டிற்கு கிடைப்பார்கள்.

தமிழகம் இந்தியாவிற்கு நிறைய வித்தியாசமான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. பயனற்ற ஆழ்துளை கிணற்றை மழைநீர்சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதியயோசனை தமிழகத்தில் உதித்துள்ளது. ஆழ்துளை கிணறுகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க இது உதவும். இதன் மூலம் அதிக அளவில் தண்ணீர் சேகரிக்கவும் முடிவும். அவர்களை நாம் பின்பற்ற வேண்டும்” என்று பிரதமர் மோடி மான் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story