குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள மனித சங்கிலி


குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள மனித சங்கிலி
x
தினத்தந்தி 26 Jan 2020 11:00 PM GMT (Updated: 26 Jan 2020 8:59 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

திருவனந்தபுரம்,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களில், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. பின்னர் அந்த போராட்டம் பிற மாநிலங்களுக்கும் பரவி நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை உருவானது.

எனினும் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக பா.ஜனதா ஆட்சியில் இல்லாத கேரளா, மேற்குவங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

மேற்கூறிய மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. அதுமட்டும் இன்றி இந்த விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக அந்த மாநிலங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் குடியுரசு தினமான நேற்று கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பிரமாண்ட மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கேரளாவின் இருபகுதி எல்லைகளான வடக்கில் உள்ள காசர்கோடு முதல் தெற்கில் உள்ள களியக்காவிளை வரை 620 கி.மீ. தூரத்துக்கு மக்கள் கைகளை கோர்த்து மனித சங்கிலியாக நின்றனர். முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கனம் ராஜேந்திரன் ஆகியோர் தலைநகர் திருவனந்தபுரத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.

மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 60 முதல் 70 லட்சம் மக்கள் பங்கேற்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.


Next Story