நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து மீண்டும் முறையீடு


நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து மீண்டும் முறையீடு
x
தினத்தந்தி 27 Jan 2020 7:53 AM GMT (Updated: 27 Jan 2020 7:53 AM GMT)

கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ், சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

குற்றவாளிகள் தரப்பில் இருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டதால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என்ற நிலை உள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், ஜனாதிபதி தனது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று குற்றவாளிகள் தரப்பு வக்கீல் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, பிப்ரவரி 1-ம் தேதி யாராவது தூக்கிடப்படுவார்கள் என்றால் அதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியதோடு, இந்த மனுவை நீதிமன்ற பதிவேட்டில் சேர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சட்டரீதியான வாய்ப்புகளை  பயன்படுத்தி தண்டனையை தாமதப்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மரண தண்டனை நிறைவேற்றும் விதிமுறைகளில் மாற்றம் செய்யுமாறு மத்திய அரசு கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் கேட்டுக் கொண்டது.

தற்போதைய விதிகள் குற்றவாளிகள் சட்டத்துடன் விளையாடுவதற்கும், மரணதண்டனையை தாமதப்படுத்துவதற்கும் அனுமதிக்கிறது என்று மத்திய அரசு தனது மனுவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story