குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 27 Jan 2020 12:12 PM GMT (Updated: 27 Jan 2020 9:58 PM GMT)

கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கொல்கத்தா,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறியுள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டம் ஒன்றை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. குடியுரிமை திருத்த சட்டம் எனப்படும் இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்த சட்டத்தை பலமாக எதிர்த்து வரும் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள், சமூக அமைப்புகள் போன்றவை சட்டத்துக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இதைப்போல குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் சட்டசபைகளில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

அந்த வகையில் கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநில சட்டசபைகளில் இந்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) போன்றவற்றை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தமாட்டோம் என கேரளா போன்ற மாநிலங்கள் அறிவித்து உள்ளன.

இந்த வரிசையில் நேற்று மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு சட்டசபை கூட்டத்தில், சட்டசபை விவகாரங்கள் துறை மந்திரி பார்த்தா சட்டர்ஜி இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

இந்த தீர்மானத்தின் மீது பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ‘குடியுரிமை திருத்த சட்டம் அரசியல்சாசனத்துக்கும், மனித குலத்துக்கும் எதிரானது. இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இதைப்போல தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடும் திரும்பப்பெற வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆகிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. எனவே பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. ஆனால் பா.ஜனதா உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னதாக மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கு வங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story