நிர்பயா வழக்கு; குற்றவாளிகளை தூக்கிலிடும் மாதிரி நடைமுறை திகார் சிறையில் நிறைவேறியது
நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் மாதிரி நடைமுறை திகார் சிறையில் நிறைவேறியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
‘நிர்பயா’ என்று அழைக்கப்படுகிற துணை மருத்துவ மாணவியை, டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்தது. இதில் படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ராம்சிங், திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓர் இளம் குற்றவாளி 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, தண்டனைக்காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்.
முகேஷ் குமார்சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு விசாரணை கோர்ட்டு 2013-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது. அதை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துவிட்டன.
முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்து விட்டார். வினய் குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோரின் கடைசி சட்ட போராட்டமான சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி காலை 6 மணியளவில் நீதிமன்ற உத்தரவின்படி, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இதனிடையே, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் மாதிரி நடைமுறை திகார் சிறையில் இன்று வெற்றிகரமுடன் நடந்தது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதன்படி காலியான சாக்குகளில் கற்கள் மற்றும் பிற பொருட்களை குற்றவாளிகளின் எடைக்கு தக்கபடி நிரப்பி அவற்றை தூக்கிலிட்டனர்.
Related Tags :
Next Story