தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்


தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 27 Jan 2020 10:29 PM GMT (Updated: 27 Jan 2020 10:29 PM GMT)

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இது தொடர்பாக, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சார்பில் அவரது வக்கீல் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி தேவை இல்லை என்று மத்திய அரசு கடந்த 16-ந்தேதி அரசிதழில் அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இதுபோன்ற திட்டங்களால் காவிரி டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பு அடையும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். விவசாயம் முடங்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை உருவாகும்.

எனவே சுற்றுச்சூழல் அனுமதி இன்றியும், பொதுமக்களிடம் கருத்து கேட்காமலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசியல் சட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் இந்த அறிவிப்பாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரை வில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story