அமைதியான நாடு என்ற இந்தியாவின் பெருமையை மோடி அழித்துவிட்டார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு


அமைதியான நாடு என்ற இந்தியாவின் பெருமையை மோடி அழித்துவிட்டார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Jan 2020 11:00 PM GMT (Updated: 28 Jan 2020 9:26 PM GMT)

அமைதி மற்றும் நல்லிணக்க நாடு என்ற இந்தியாவின் பெருமையை மோடி அழித்துவிட்டார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் கோபம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மோடி அரசு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதி அளித்தது. ஆனால் கடந்த ஆண்டு ஒரு கோடி பேர் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இளைஞர்கள் தங்கள் குரல் அடக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது. நாட்டின் எதிர்காலம் குறித்தும், வேலைவாய்ப்பு குறித்தும் இளைஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

பாகிஸ்தானுக்கு நேர்மாறாக, இந்தியா அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான நாடு என்று பெயர் பெற்றது. ஆனால் அந்த பெருமை இப்போது அழிக்கப்பட்டுவிட்டது. முதலீடுகள் தடுக்கப்படுகிறது. நரேந்திர மோடி இந்தியாவின் பெருமையையும், உலக நாடுகளிடம் இருந்த புகழையும் அழித்துவிட்டார்.

இந்தியா இப்போது கற்பழிப்பின் தலைநகரமாகிவிட்டது. ஆனால் நரேந்திர மோடி இதுபற்றி பேசமாட்டார். இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ, இந்தியாவின் பெருமையை ஏன் அழித்தீர்கள் என்றோ மோடியிடம் கேள்வி எழுப்பினால் உங்களுக்கு துப்பாக்கி குண்டுகள்தான் பதிலாக கிடைக்கும். உங்கள் குரல் அடக்கப்படும்.

இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மற்றும் வலிமை இளைஞர்கள்தான். இது சீனாவுடன் போட்டி போடும் அளவுக்கு உள்ளது. ஆனால் அரசு இந்த சொத்தை வீணடிக்கிறது என்று அவர் பேசினார்.

கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘தேசிய வேலையில்லாத இளைஞர்கள் பதிவேடு’ (என்.ஆர்.யு.) என்ற சுவரொட்டியை வெளியிட்டார். இதில் வேலை இல்லாத இளைஞர்கள் பதிவு செய்ய வேண்டும். அதன்மூலம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்ற தகவலை பிரதம மந்திரியிடம் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.


Next Story