‘நிர்பயா’ குற்றவாளியின் மறுசீராய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


‘நிர்பயா’ குற்றவாளியின் மறுசீராய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Jan 2020 10:45 PM GMT (Updated: 30 Jan 2020 9:54 PM GMT)

‘நிர்பயா’ குற்றவாளியின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

டெல்லியில் ‘நிர்பயா’ என்று அழைக்கப்படும் மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோரில் அக்‌ஷய் குமார் சிங் மற்றும் பவன் குப்தா தரப்பில் டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ’நாங்கள் இருவரும் சட்டம் அனுமதித்துள்ள சலுகைகள் அனைத்தையும் இன்னும் முழுமையாக பயன்படுத்தவில்லை. தங்கள் (அக்‌ஷய் குமார் சிங் மற்றும் பவன் குப்தா) தரப்பில் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. மற்றொரு குற்றவாளியான வினய் குமார் சர்மா ஜனாதிபதிக்கு தாக்கல் செய்த கருணை மனு மீது இன்னும் முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே கடந்த 17–ந்தேதி பிறப்பிக்கப்பட்ட மரண வாரண்டை ரத்து செய்து 1–ந்தேதி (அதாவது நாளை) எங்களை தூக்கிலிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நேற்று விசாரித்த கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி அஜய் குமார் ஜெயின், குற்றவாளிகளின் இந்த மனுவின் மீது நாளை (அதாவது இன்று) காலை 10 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய திகார் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்தார்.

டெல்லி சிறை விதிமுறையில் விதி 836 மற்றும் 856 ஆகியவற்றின் கீழ் தங்களை தூக்கில் போட தடை விதிக்குமாறு குற்றவாளிகளின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு தூக்கில் போட 14 நாட்கள் நோட்டீஸ் அளிக்க வேண்டும். மேலும் 2 குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்ய உள்ளதால் தங்களுக்கு மரண வாரண்டில் பிறப்பிக்கப்பட்ட 1–ந்தேதியன்று (அதாவது நாளை) தூக்கிலிட முடியாது என்றும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்த வழக்கின் குற்றவாளியான அக்‌ஷய்குமார் சிங்கின் மறுஆய்வு மனுவை கடந்த மாதம் 18–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோகின் பாலி நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூ‌ஷண் ஆகியோர் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டனர். பின்னர் அக்‌ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து அவர்கள் உத்தரவிட்டனர்.


Next Story