நிர்பயா வழக்கு; 3வது குற்றவாளி ஜனாதிபதிக்கு கருணை மனு


நிர்பயா வழக்கு; 3வது குற்றவாளி ஜனாதிபதிக்கு கருணை மனு
x
தினத்தந்தி 1 Feb 2020 6:42 AM GMT (Updated: 1 Feb 2020 6:42 AM GMT)

நிர்பயா வழக்கில் 2 பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 3வது குற்றவாளி ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்து உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது.

குற்றவாளிகள் 4 பேரையும் ஜனவரி 22-ந்தேதி தூக்கில்போட வேண்டும் என்று கடந்த 7-ந்தேதி டெல்லி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

முகேஷ்குமார் சிங் கருணை மனுவை கடந்த 17-ந்தேதி ஜனாதிபதி நிராகரித்தார். அதை தொடர்ந்து மீண்டும் டெல்லி கோர்ட்டு 4 பேரையும் பிப்ரவரி 1-ந்தேதி (இன்று) தூக்கில்போட வேண்டும் என்று 2-வது மரண வாரண்டு பிறப்பித்தது.  4 பேரையும் தூக்கில் போடுவதற்கான பணிகள் திகார் ஜெயிலில் கடந்த ஒரு வாரமாக முழுவேகத்துடன் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 4 குற்றவாளிகளில் அக்‌ஷய், பவன்குப்தா ஆகியோர் தரப்பில் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தர்மேந்தர் ராணா, குற்றவாளிகள் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை இவர்களை தூக்கிலிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் 4 பேருக்கும் இன்று நிறைவேற்ற இருந்த தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்நிலையில், வினய் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்து உள்ளார்.  இதனால் முகேஷ் மற்றும் வினய் ஆகிய இருவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து இந்த வழக்கின் குற்றவாளியான அக்ஷய் தாகூர் ஜனாதிபதியிடம் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

Next Story