மே 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மராட்டிய அரசு முடிவு


மே 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மராட்டிய அரசு முடிவு
x
தினத்தந்தி 5 Feb 2020 3:02 AM GMT (Updated: 5 Feb 2020 3:02 AM GMT)

மராட்டியத்தில், ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மே 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்படும் என மந்திரி ஆதித்ய தாக்கரே அறிவித்து உள்ளார்.

மும்பை, 

மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் தடை சரிவர அமல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே தீவிரம் காட்டி உள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான செயல்திட்டத்தை வருகிற 20-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டார்.

பின்னர் இதுபற்றி ஆதித்ய தாக்கரே பேசுகையில், “ஒருமுறை மட்டும் பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானவை. அதன் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் மாசு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மே 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்படும். அதற்குள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்” என்றார்.

Next Story