ஷாகீன் பாக் பகுதியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் ஷாகின் பாக் பகுதியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக ஷாகின் பாக் பகுதியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் வரும் 8 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் ஷாகின் பாக் போராட்ட களத்திற்கு சென்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர். போராட்டக்காரர்களை சந்தித்து பேசிய தேர்தல் ஆணைய அதிகாரிகள், டெல்லி சட்டமன்ற தேர்தலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வாக்களிக்காமல் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினர். தேர்தல் கமிஷனின் சிறப்பு செலவின பார்வையாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்ட களத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசிய போராட்டக்காரர்கள், தேர்தல் அமைதியாக நடைபெற நாங்கள் அதிகாரிகளுக்கு உதவி அளிப்போம்’ என்று தெரிவித்தனர். ஷாகின் பாக் பகுதியில் அமைந்துள்ள 5 வாக்குச்சாவடிகளையும் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story