பிரம்பு கொண்டு அடிப்பார்கள் என்ற ராகுல்காந்திக்கு ... அசாம் கூட்டத்தில் மீண்டும் பதில் அளித்த மோடி


பிரம்பு  கொண்டு அடிப்பார்கள் என்ற ராகுல்காந்திக்கு ... அசாம் கூட்டத்தில் மீண்டும்  பதில் அளித்த மோடி
x
தினத்தந்தி 7 Feb 2020 11:56 AM GMT (Updated: 7 Feb 2020 11:56 AM GMT)

”மக்கள் என் மீது அன்பு வைத்து என்னை காப்பார்கள்” என 2-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிரம்பு கொண்டு அடிப்பார்கள் என்ற கருத்துக்கு பதில் அளித்தார்.

கோக்ராஜ்கர்

டெல்லியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய இளைஞர்கள் இன்னும் ஆறு மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, பிரம்பு  கொண்டு அடிப்பார்கள் என்றார். 

இதற்கு ஜனாதிபதி  உரை மீது நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தம்முடைய முதுகை வலிமையாக்கி கொள்ள அதிக சூரிய நமஸ்காரம்  செய்வேன் என, ராகுல்காந்தியின் பேச்சுக்கு மறைமுகமாக பதில் அளித்து பேசினார்.

இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக அசாம் கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் , பிரம்பு  கொண்டு அடிப்பார்கள் என்ற  கருத்துக்கு பதில் அளித்தார்.

போடோ அமைப்புகள் - மத்திய அரசு - அசாம் அரசு இடையில் உடன்பாடு ஏற்பட்டதை கொண்டாடும் வகையில் அசாமில் பொதுக்கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது;-

அமைதி நேசிக்கும் அசாம், அமைதி மற்றும் அபிவிருத்தி வடகிழக்கு, புதிய இந்தியாவின் புதிய தீர்மானங்களுக்கு உங்களை வரவேற்கிறேன். நான் உங்களுக்கு மரியாதை செலுத்துகிறேன், உங்கள் அனைவருக்கும் நன்றி. அனைத்து அசாமிய மக்களிடமும் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்த நான் இங்கு வந்துள்ளேன்.

சில நேரங்களில், சில தலைவர்கள் என்னை பிரம்பால்  அடிப்பதைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் இந்தியாவின் அனைத்து தாய்மார்களின் ஆசீர்வாதங்களால் நான் காப்பாற்றப்படுவேன். உங்களைப் போன்ற தாய்மார்களின் அன்பு மற்றும் ஆதரவுடன் நான் எத்தனை முறை தாக்கப்பட்டாலும் எதுவும் நடக்காது. 

மண்ணின் மைந்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அசாம் மாநில அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் சிக்கலான பிரச்சினைகளை தீர்க்க இதுவரை ஆண்ட யாரும் முன்வரவில்லை.வெற்று வாக்குறுதிகளில் அல்ல; தமது அரசு செயலாற்றுவதிலேயே கவனம் செலுத்துகிறது. அசாமில் போடோ வட்டார மேம்பாட்டுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்  என கூறினார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான அசாமில், போடோலாந்து தனி மாநிலம் கோரி, தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி) அமைப்பு போராடி வருகிறது. அதேபோல, அனைத்து போடோ மாணவர் கூட்டமைப்பு (ஏ.பி.எஸ்.யூ.) உள்ளிட்ட மாணவர் அமைப்புகளும் இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், போடோலாந்து  பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, இதற்கான தொடர் போராட்டங்களை நடத்தி வரும் என்.டி.எப்.பி., ஏ.பி.எஸ்.யூ உடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.

Next Story