டெல்லி சட்டசபை தேர்தல்; 9 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 52 இடங்களில் முன்னிலை


டெல்லி சட்டசபை தேர்தல்; 9 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 52 இடங்களில் முன்னிலை
x
தினத்தந்தி 11 Feb 2020 3:58 AM GMT (Updated: 11 Feb 2020 3:58 AM GMT)

டெல்லி சட்டசபை தேர்தலில் 9 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 52 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வருகிற 22-ந்தேதியுடன் முடிவடைகிறது.  இதனை முன்னிட்டு 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் 11-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கடந்த மாதம் 6-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டின.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. மும்முனை போட்டியில் ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் பேரணிகள், பிரசாரங்கள் என கடுமையாக அரசியல் பணிகளில் ஈடுபட்டன.

இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை அமைதியுடன் நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினர், சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவர்களின் மகன் ரைஹான் ராஜீவ் வதேரா, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் ஆகியோர் வாக்களித்து சென்றனர்.

தேர்தலுக்கு பின் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என ஒரு தரப்பிலும், பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என அக்கட்சியினரும் கூறி வந்தனர்.  இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.  முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.  இவற்றில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்தது.

டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி காலை 9 மணி நிலவரப்படி 52 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.  பா.ஜ.க. 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் எந்த இடத்திலும் முன்னிலையில் இல்லை.  இதனால் ஆம் ஆத்மி 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

Next Story