டெல்லி சட்டசபை தேர்தல்; ஆம் ஆத்மி-32, பா.ஜ.க.-16 முன்னிலை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு


டெல்லி சட்டசபை தேர்தல்; ஆம் ஆத்மி-32, பா.ஜ.க.-16 முன்னிலை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Feb 2020 4:42 AM GMT (Updated: 11 Feb 2020 4:42 AM GMT)

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை அமைதியுடன் நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது.  ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் பேரணிகள், பிரசாரங்கள் என கடுமையாக அரசியல் பணிகளில் ஈடுபட்டன.

தேர்தலுக்கு பின் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என ஒரு தரப்பிலும், பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என அக்கட்சியினரும் கூறி வந்தனர்.  இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.  முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.  இவற்றில் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்தது.

டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி காலை 9 மணி நிலவரப்படி 52 இடங்களில் முன்னிலையில் இருந்தது.  பா.ஜ.க. 18 இடங்களில் முன்னிலை வகித்தது.  இதனால் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுக்கு எந்த இடமும் இல்லை.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  இதேபோன்று பா.ஜ.க. 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வரும் நிலையில், 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.  இதனால் அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story