கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 2 பேர் குணமடைந்தனர்


கேரளாவில்   கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 2 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 11 Feb 2020 10:44 PM GMT (Updated: 11 Feb 2020 10:44 PM GMT)

கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 2 பேருக்கு தற்போது வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவில் இருந்து கடந்த 23-ந் தேதி இந்தியா திரும்பிய கேரள மாணவி ஒருவர் கொரோனா அறிகுறி இருப்பதாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனை புனே ஆய்வு மையம் உறுதி செய்தது. பின்னர் அந்த மாணவிக்கு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே சீனாவில் இருந்து திரும்பிய ஆலப்புழா மற்றும் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 2 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கும் ஆலப்புழா மற்றும் காசர்கோடு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் திருச்சூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவியும், ஆலப்புழாவில் சிகிச்சை பெற்ற மாணவரும் வேகமாக குணமடைந்து வந்தனர். அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோது தற்போது வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் 2 பேரின் ரத்த மாதிரிகளும் மீண்டும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புனே ஆய்வகம் வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்தால் அவர்கள் இருவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story