ஆம் ஆத்மி சட்டமன்ற குழு தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு
ஆம் ஆத்மி சட்டமன்ற குழு தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதையொட்டி, அங்கு புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8ந்தேதி நடைபெற்றது. டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 22 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர். இறுதியில் அந்த கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது.
தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ள நிலையில், 3வது முறையாக கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்கிறார். இதற்கான பதவியேற்பு விழா வருகிற 16ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்று கொள்கிறார்.
இந்நிலையில், ஆளுநர் அனில் பைஜாலை ராஜ் நிவாசில் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. இதன்பின் உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆம் ஆத்மி சட்டமன்ற குழு தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story