குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மம்தா பானர்ஜி மீண்டும் பேரணி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று மீண்டும் பேரணி நடத்தினார்.
கொல்கத்தா,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் தினந்தோறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் செயல்படுத்தப்படாது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் துர்காபூரில் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பேரணி நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசியதாவது:
''குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதனை மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.'' எனக் கூறினார்.
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது. அப்போது அவர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்.
Related Tags :
Next Story