ஏப்ரல் 15-ந்தேதிக்குள் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார்?


ஏப்ரல் 15-ந்தேதிக்குள் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார்?
x
தினத்தந்தி 13 Feb 2020 12:02 PM GMT (Updated: 13 Feb 2020 12:02 PM GMT)

ஏப்ரல் 15-ந்தேதிக்குள் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர் காங்கிரஸ்  கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதற்கான கடிதத்தையும் கட்சியின் தலைமையிடம் ஒப்படைத்துள்ளார்.  ஆனால் அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்று கட்சியின் பதவியில் தொடரவேண்டும் என கட்சியின் பல்வேறு மட்டத்தில்  வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

தலைவராக யாரும் பொறுப்பு ஏற்க முன்வராததால், இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி  கட்சியை வழி நடத்தி வருகிறார். உடல்நிலை சரியில்லாத அவர் கட்சி பணிகளை கவனிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

எனவே விரைவில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையே பெரும்பாலான தலைவர்கள் விரும்புகிறார்கள்.

அவரை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்களால் கட்சிக்கு செல்வாக்கு பெற முடியாது என்று கருதுகின்றனர்.

இதனால் ராகுல்காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்று குரல் எழுந்தது. குறிப்பாக ராஜஸ்தான் முதல்-மந்தரி அசோக்கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ராகுல்காந்தியை தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இதற்கு ராகுல் சம்மதித்து விட்டதாக தெரிகிறது. எனவே அவரை முறைப்படி தலைவராக தேர்வு செய்ய உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாநாடு அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்பட இருக்கிறது. அதில் புதிய தலைவரை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

ஏப்ரல் 15-ந்தேதிக்குள் ராகுல்காந்தி தலைவராக தேர்வு செய்யப்பட்டு விடுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. விரைவில் ராகுல் தலைவர் பதவியில் அமருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவருக்காக, காரியக் கமிட்டியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதை அகில இந்திய காங்கிரசின் பொதுக்குழு ஏற்றுக் கொண்டாலே போதுமானது எனக் கருதப்படுகிறது. எனவே, காங்கிரசின் தலைவர் பதவிக்கு ராகுல், இரண்டாவது முறையாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story