அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார் 1¼ லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் இருவரும் பேச்சு


அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார்   1¼ லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் இருவரும் பேச்சு
x

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 24-ந் தேதி ஆமதாபாத் வந்து தரை இறங்குகிறார். அவரை பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார். இருவரும் 1¼ லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் பேசுகிறார்கள்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மனைவி மெலனியாவுடன் வருகிற 24-ந் தேதியும், 25-ந் தேதியும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

24-ந் தேதி, குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் ஏர்போர்ஸ்-1 விமானம் மூலம் டிரம்பும், மெலனியாவும் வந்து தரை இறங்குகிறார்கள்.

அவர்களை பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு வந்து நேரில் வரவேற்கிறார்.

சபர்மதி ஆசிரமம் பார்வையிடல்

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் டிரம்ப், மெலனியா தம்பதியர் மகாத்மா காந்தியின் வாழ்வில் முக்கிய பங்கு வகித்த சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடுகிறார்கள்.

இதற்காக விமான நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு அவர்கள் சாலை வழியாக (ரோடு ஷோ) அழைத்துச்செல்லப்படுகிறார்கள். 10 கி.மீ. தொலைவிலான இந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடியும் அவர்களுடன் வருகிறார்.

இதற்காக அந்த சாலையை அழகுபடுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற உள்ளது. சாலையில் இருபுறத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

1¼ லட்சம் பேர் பங்கேற்கும் நிகழ்ச்சி

அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு சென்றபோது, அங்கு ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி. மைதானத்தில் 50 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொண்ட ‘மோடி நலமா?’ (ஹவ்டி மோடி) என்ற பெயரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சி போல ஆமதாபாத்தில் டிரம்புக்காக ‘கெம் சோ டிரம்ப்’ ( ‘டிரம்ப், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’) என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி, ஆமதாபாத்தில் மோட்டேரா பகுதியில் விரிவாக்கம் செய்து, புதுப்பிக்கப்பட்டுள்ள பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இதில் 1¼ லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மோடியும், டிரம்பும் பேசுகிறார்கள். மேலும் டிரம்பின் குடியரசு கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

கலை நிகழ்ச்சிகள்

டிரம்ப் தம்பதியரின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் வகையில், விமான நிலையம், ரோடு ஷோ, சர்தார் வல்லபாய் படேல் மைதானம் என எல்லா பக்கமும் இந்தியாவின் பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கிற கலை நிகழ்ச்சிகளுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆமதாபாத் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, டிரம்ப் தம்பதியர் டெல்லி செல்கிறார்கள்.

ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு

25-ந் தேதி ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு அணிவகுப்பு மரியாதையுடன் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்படுகிறது. இதில் முப்படை வீரர்களும் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து டிரம்ப், ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

அதைத்தொடர்ந்து ஐதராபாத் பவனில் பிரதமர் மோடியுடன் டிரம்ப் பங்கேற்கும் தூதுக்குழு அளவிலான இரு தரப்பு உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில், இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.

சமீபத்தில் பாதுகாப்பு துறைக்கான மத்திய மந்திரிகள் குழு, கடற்படைக்காக 24 ரோமியோ பன்னோக்கு ஹெலிகாப்டர்கள், விமான படைக்கு 6 அபாச்சி போர் ஹெலிகாப்டர்கள், 6 ‘பி-81 சீ டீஹீ’ விமானங்கள் வாங்க அனுமதி அளித்தது நினைவுகூரத்தக்கது.

எப்-16 போர் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவங்களான எப்-21, எப்-18 விமானங்களை ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் இரு நாடுகளும் கூட்டாக தயாரிக்க பிரதமர் மோடியிடம் டிரம்ப் ஆலோசனை கூறுவார் என தகவல்கள் கூறுகின்றன. இரு நாடுகளும் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முயற்சி என்ற பிரிவில் 7 திட்டங்களை அடையாளம் கண்டுள்ளன.

இவை தொடர்பாகவும் இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story