மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார் 68 மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை


மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார்  68 மாணவிகளின்  ஆடைகளை கழற்றி சோதனை
x
தினத்தந்தி 14 Feb 2020 12:43 PM GMT (Updated: 14 Feb 2020 12:43 PM GMT)

மாதவிடாய்க் காலத்தில் கோவில், சமையலறைக்கு சென்றதாக புகார் . 68 மாணவிகளை சோதனை செய்த கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அகமதாபாத்

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் ஸ்ரீசஹ்ஜானந்த் பெண்கள் இன்ஸ்ட்டியூட் என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2012ம் ஆண்டு முதல் இந்த கல்லூரியில் சுமார் 1500  மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரியின் கட்டுப்பாட்டில் விடுதி ஒன்றும் இயங்கி வருகிறது.

இந்த விடுதியில் 68 மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த மாணவிகள் அனைவருமே தொலைதூரத்தில் உள்ள  கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நிலையில், விடுதியில் நடந்த ஒரு சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பலரும் சமையலறைக்கு செல்வதாகவும், கல்லூரி வளாகத்தில் உள்ள கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக முதல்வருக்கு விடுதி நிர்வாகம் வழியாக புகாராக அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, விடுதியில் தங்கியிருந்த 68 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் விசாரணைக்கு அழைத்தது  68 மாணவிகளில் யார், யார் மாதவிடாய் காலங்களில் இருக்கின்றனர் என்று முதல்வர் மற்றும் விடுதி நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து 2 பேர் ஒதுங்கியிருக்கின்றனர். அதன்பிறகும் நம்பாத கல்லூரி நிர்வாகத்தினர், எஞ்சியிருந்த 66 பேரை கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் உள்ளாடைகளை அகற்றச் செய்து, அவர்களுக்கு மாதவிடாய் இருக்கிறதா இல்லையா என்று சோதனை நடத்தி உள்ளனர்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த கேவலமான செயல் தற்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. போலீஸ் புகார்  இதுவரை பதிவு செய்யப்படவில்லை,  ஆனால் பொறுப்பு துணைவேந்தர், கிரந்திகுரு ஷியாம்ஜி  விசாரணை குழு அமைத்து உள்ளார்.

இந்த வகையான நடத்தைக்கு யார் காரணம் என்று நாங்கள் கண்டறிந்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என ஷியாம்ஜி  கூறி உள்ளார்.

Next Story