கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க டெல்லியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 50 பேருக்கு அழைப்பு


கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க டெல்லியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 50 பேருக்கு அழைப்பு
x
தினத்தந்தி 15 Feb 2020 11:00 PM GMT (Updated: 15 Feb 2020 9:34 PM GMT)

டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர் தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு டெல்லியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 50 பேருக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

கெஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் டெல்லி முதல்-மந்திரியாக தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் அவருடைய பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, டெல்லி பா.ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. டெல்லி மக்கள் மட்டுமே இந்த விழாவுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும், அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் அக்கட்சி சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்கள் முதல் டாக்டர்கள் வரை என்று டெல்லியின் கட்டமைப்புக்கு உதவி வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த தனிநபர்கள் 50 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கூறுகையில், பதவியேற்பு விழாவில் டெல்லியை நிர்மாணித்து வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த தனி நபர்கள் 50 பேர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மேடையை பகிர உள்ளனர். இவர்களில் பள்ளிகளின் பியூன்கள், டாக்டர்கள், ஆட்டோ ரிக்‌ஷா, பஸ், ஆம்புலன்சு டிரைவர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர்கள், பஸ்சில் பயணிக்கும் பெண்களின் பாதுகாவலர்கள் என்று பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அடங்குவர்.

Next Story