டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் அடிமை மன நிலையை காட்டுகிறது ; சிவசேனா பாய்ச்சல்


டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் அடிமை மன நிலையை காட்டுகிறது ; சிவசேனா பாய்ச்சல்
x
தினத்தந்தி 17 Feb 2020 6:55 AM GMT (Updated: 17 Feb 2020 6:55 AM GMT)

டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் இந்தியர்களின் அடிமை மன நிலையை காட்டுவதாக சிவசேனா விமர்சித்துள்ளது.

மும்பை,

 அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் அரசு பயணமாக இந்தியா வருகிறார். வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் அவர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 24 ஆம் தேதி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால், டிரம்ப் பயணிக்கும் வழிகளில், அவரை கவரும் வகையில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. 

 குஜராத்தில் ஆகமதாபாத் மாவட்டத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசைவாரிய குடியிருப்பு பகுதிகளை மறைக்கும் வகையில் 7 அடி உயரத்திற்கு அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு சுவர் ஒன்றை மாநகராட்சி கட்டி வருகிறது. ஆமதாபாத்தில் இருந்து காந்திநகர் நோக்கி செல்லும் திசையில் கட்டப்படுகிறது.

டிரம்ப் வருகைக்காக தடல்புடல் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அரசின் இந்த ஏற்பாடுகளை சிவசேனா கட்சி கடுமையாக சாடியுள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது ;-  “ டிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது. டிரம்பின் இந்திய வருகை பேரரசரின் வருகை போல உள்ளது.  சுதந்திரத்திற்கு முன் பிரிட்டன் அரசர்  அல்லது ராணி,  இந்தியா போன்ற தங்களின் அடிமை நாடுகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது டிரம்ப் வருகைக்காக மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் இந்த ஏற்பாடுகள் அதைப் போன்றே உள்ளது. 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வறுமை இருந்தது என்ற கோஷத்தை முன் வைத்தார். இந்திரா காந்தியின் கோஷம் நீண்ட நாட்களுக்கு ஏளனம் செய்யப்பட்டது. தற்போது, மோடி ”வறுமையை மறைப்பது”போல தெரிகிறது. அகமதாபாத்தில் இவ்வளவு நீளமான சுவரை எழுப்ப நிதி ஒதுக்கீடு எதும் செய்யப்பட்டதா? நாடு முழுவதும் இவ்வாறு சுவர் எழுப்ப அமெரிக்கா  கடனுதவி எதுவும் வழங்கப்போகிறதா?  டிரம்ப், அகமதாபாத்திற்கு வெறும் 3 மணி நேரம் மட்டுமே செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,  மாநில அரசு கருவூலத்தில் இருந்து ரூ.100 கோடி செலவில் சுவர் கட்டப்படுகிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story