சொத்துக்கள் முடக்கம்: விஜய் மல்லையா மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
தனது சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
புதுடெல்லி,
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, சில வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளார். அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிஓடி விட்டார். இந்தியா விடுத்த வேண்டுகோளின் பேரில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அப்போது இருந்து அவர் ஜாமீனில் உள்ளார்.
இந்தியா தொடர்ந்த வழக்கில் அவரை நாடு கடத்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு இங்கிலாந்து உள்துறை மந்திரி சஜித் ஜாவீத் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தார்.நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து லண்டன் ராயல் கோர்ட்டில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதை எதிர்த்து விஜய் மல்லையா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
Related Tags :
Next Story