மராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு


மராட்டியத்தில்   தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம்   முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2020 11:45 PM GMT (Updated: 18 Feb 2020 10:46 PM GMT)

மராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மும்பை, 

மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ள சிவசேனா சட்டத்தை ஆதரித்து மக்களவையில் வாக்களித்தது. ஆனால் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.

அதே நேரத்தில் மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார். ஆனால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மராட்டியத்தில் தடை இல்லை என்று அவர் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் மராட்டியத்தில் அமல்படுத்தப்படும் என யாரும் கவலைப்பட வேண்டாம். தேசிய குடிமக்கள் பதிவேடு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டால் அது மராட்டியத்தில் அமல்படுத்தப்படாது.

ஆனால் என்.பி.ஆர். என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறைதான். ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இது நடக்கும்போது யாரும் பாதிக்கப்படுவார்கள் என்று நான் கருதவில்லை. எனவே இதை மராட்டியத்தில் அமல்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. இதை நாங்கள் தடுக்க மாட்டோம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story