முதுமையிலும் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்த 93 வயது தாத்தா!


முதுமையிலும் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்த  93 வயது தாத்தா!
x
தினத்தந்தி 19 Feb 2020 12:50 PM GMT (Updated: 19 Feb 2020 12:50 PM GMT)

டெல்லியை சேர்ந்த முதியர் ஒருவர் தனது 93 வயதிலும் முதுகலை பட்டம் பெற்று இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழ்கிறார்.

புதுடெல்லி,

டெல்லியை சேந்த சிவசுப்பிரமணியன் (வயது 93) 1940 களில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.  பிறகு தான் பட்டம் பெற வேண்டும்  என நினைத்துள்ளார் ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னுடைய குடும்பம் சென்னைக்கும் திருச்சிக்கும் குடிபெயர்ந்து கொண்டிருந்தனர். முடிவில் இறுதியாக டெல்லிக்கு குடிபெயர்ந்தனர்.

டெல்லியில் தனது பட்டப்படிப்பை தொடரலாம் என அவர் முடிவெடுத்த இருந்த நேரத்தில் அவருடைய பெற்றோர் வயதின் காரணமாக  அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கூடுதலாக அவர்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு சிவசுப்பிரமணியனுக்கு ஏற்பட்டது.  இதனால் பட்டப்படிப்பை படிக்காமல் மத்திய அரசு அலுவலகத்தில் எழுத்தராக வேலைக்கு சேர்ந்தார். மேலும் அந்த அலுவலகத்திலேயே இயக்குனராக பதவி உயர்வு அடைந்து ஓய்வும் பெற்றார்.

காலங்கள் கடந்து ஓடினாலும்  தன்னுடைய கனவான பட்டப்படிப்பை தொடர வேண்டும் எனும் ஏக்கம் அவரை விடவில்லை. பட்டம்பெற வாய்ப்பு ஏதாவது கிடைக்காத என தேடிக்கொண்டே இருந்த அந்த முதியவருக்கு ஒருநாள் தன்னுடைய மனைவியை பரிசோதிக்க வந்த டாக்டர்  திறந்தநிலை பல்கலைக்கழகம் பற்றி கூறியுள்ளார். மேலும் அதற்கு வயதும் தடையில்லை என்று அவர் தெரிவித்தது சிவசுப்ரமணியனுக்கு  நம்பிக்கை ஒளி வீசியது. 

உடனே இளங்கலை பொதுநிர்வாகத்தில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார். மேலும் முதுகலை படிப்பிலும் தேர்ச்சி பெற்று தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார்.  

இந்தநிலையில், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிக வயதுடைய மாணவர் சிவசுப்பிரமணியன்  என்ற பெருமையை பெற்றார். 

மேலும் தன்னுடைய அடுத்த கட்ட திட்டமாக எம்.பில்.,படிக்க நினைத்தார் ஆனால் அந்த படிப்பில் சில இடங்கள் மட்டுமே உள்ளது எனவும் அவை தகுதியான மாணவர்களுக்கு விட்டுக்கொடுங்கள் என தன்னுடைய மகள் கேட்டுக்கொண்டதால், அந்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தாக சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தள்ளாத வயதிலும் படிப்பின் மீதான ஆர்வத்தை நிறைவேற்ற பல இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ள சிவசுப்பிரமணியன் இன்றைய கால இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறார். 

Next Story