டிரம்ப் மனைவியின் டெல்லி பள்ளி சந்திப்பில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை: சசிதரூர் கண்டனம்


டிரம்ப் மனைவியின் டெல்லி பள்ளி சந்திப்பில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை: சசிதரூர் கண்டனம்
x
தினத்தந்தி 22 Feb 2020 10:45 PM GMT (Updated: 22 Feb 2020 9:37 PM GMT)

டிரம்ப் மனைவியின் டெல்லி பள்ளி சந்திப்பில் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லாததற்கு சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது மனைவி மெலனியா உள்ளிட்டோருடன் நாளை (திங்கட்கிழமை) இந்தியா வருகிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கு 25-ந்தேதி செல்லும் மெலனியா டிரம்ப், அங்கு கெஜ்ரிவால் அரசு அறிமுகப்படுத்தி உள்ள மகிழ்ச்சி பாடத்திட்ட வகுப்பை பார்வையிடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் மெலனியாவுடன் முதல்-மந்திரி கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா ஆகியோரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அவர்கள் இருவரின் பெயர்களும் நீக்கப்பட்டு உள்ளன. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பெயர் நீக்க நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘அரசு நிகழ்வுகளில் குறிப்பிட்ட சிலருக்கு அழைப்பிதழ் அனுப்பும் மோடி அரசின் இத்தகைய மலிவான அரசியல், நமது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஜனாதிபதி மாளிகை வரவேற்பு மற்றும் பிரதமர் வரவேற்பு நிகழ்வுகளில் எதிர்க்கட்சிகளை புறக்கணிப்பது இந்தியாவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ளார்.

Next Story