ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளோம் -பிரதமர் மோடி
ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம் என பிரதமர் மோடி கூறினார்
புதுடெல்லி
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் மகள் இவாங்கா டிரம்ப், மருமகன் ஜார் குஷ்னர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர்.
டிரம்புக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஐதராபாத் மாளிகையின் முன் உள்ள புல்வெளிகளில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
டிரம்ப் - மோடி முன்னிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-
உங்களை (அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்) மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதுக்குழுவை வரவேற்கிறேன். இந்த நாட்களில் நீங்கள் பிசியாக இருப்பதை நான் அறிவேன். இந்தியா வருகைக்கு நீங்கள் நேரம் ஒதுக்கி உள்ளீர்கள். இதற்காக நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறும் போது
கடந்த இரண்டு நாட்கள், குறிப்பாக நேற்று மைதானத்தில், எனக்கு மிகப்பெரிய பெரிய மரியாதை அளிக்கப்பட்டது. என்னை விட மக்கள் உங்களுக்காக (பிரதமர் மோடி) அதிகமாக இருந்திருக்கலாம்.
ஒவ்வொரு முறையும் நான் உங்களைப் பற்றி குறிப்பிடும்போது, அவர்கள் மேலும் உற்சாகப்படுத்தினர். மக்கள் இங்கே உங்களை நேசிக்கிறார்கள் என கூறினார்.
பின்னர் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர் அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
கடந்த 8 மாதங்களில் இது எங்களது 5-வது சந்திப்பு ஆகும். தொழில் நுட்ப ஒத்துழைப்பு சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினோம்.
சைபர் கிரைம், பாதுகாப்பு, எரிசக்தி மூலோபாய கூட்டு, வர்த்தகம், மக்கள் உறவுகள் என அமெரிக்க-இந்தியா நட்பு குறித்து ஒவ்வொரு முக்கிய அம்சத்தையும் இன்று விவாதித்தோம்.
தீவிரவாதத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்தோம். பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை பொறுப்பாளர்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட நாங்கள் (இந்தியா மற்றும் அமெரிக்கா) தீர்மானித்துள்ளோம்.
எங்கள் வர்த்தக அமைச்சர்கள் வர்த்தகம் குறித்து சாதகமான பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு எங்கள் குழுக்கள் சட்ட வடிவத்தை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் இருவரும் முடிவு செய்துள்ளோம். ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சிறப்பு உறவின் மிக முக்கியமான அடித்தளம் மக்கள் தொடர்பு கொள்ளும் நபர்களாகும். தொழில் வல்லுநர்கள், மாணவர்கள், அமெரிக்காவின் இந்திய புலம்பெயர்ந்தோர் இதில் பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளனர் என் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story