இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் சமரசம் செய்ய அமெரிக்கா தயார் - டொனால்டு டிரம்ப்


இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் சமரசம் செய்ய அமெரிக்கா தயார் - டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 25 Feb 2020 1:10 PM GMT (Updated: 25 Feb 2020 1:41 PM GMT)

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் சமரசம் செய்ய அமெரிக்கா தயார் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

2 நாள் இந்தியப்பயணம் அருமையாக இருந்தது. எனக்கும் பிரதமர் மோடிக்கும் நெருங்கிய நட்பு உள்ளது. இந்தியாவுக்கு ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. எரிசக்தி துறை தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்காவில் இந்தியர்கள் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்வார்கள் என நம்புகிறேன்.

அமெரிக்கா உலக போலீஸ்காரன் அல்ல, பல நாடுகளில் இருக்கும் எங்கள் துருப்புகளை திரும்ப அழைப்போம்.  உலகில் பல பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கர்கள் பணிபுரிகின்றனர்.  ஆப்கானிஸ்தானில் 99% மக்கள் அமைதியையே விரும்புகின்றனர்.  பயங்கரவாதத்தை ஒடுக்க மற்றவர்களை விட அதிக அளவில் செயலாற்றி உள்ளேன்.

தாலிபான்களுடன் உடன்பாடு எட்டுவது குறித்து பிரதமர் மோடியுடன் பேசி உள்ளேன். தலிபான்களுடன் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என நம்புகிறேன். ஈரானைச்சேர்ந்த காசிம் சுலைமானியை சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா கொன்றுள்ளது.

ஹெச்1-பி விசா விவகாரம் குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசினேன். உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. கொரோனா வைரசால் இந்தியாவில் பெரிய பாதிப்பு இல்லை.

பிரதமர் மோடியிடம் இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து பேசவில்லை. இந்தியாவில் மத சுதந்திரம் சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்தார்.  பிரதமர் மோடி ஆன்மிகவாதி, அமைதியானவர், அதே நேரத்தில் மிக வலிமையான தலைவர், தீவிரவாதத்தை அவர் முறியடிப்பார்.

இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி வருகிறார்.  மத சுதந்திரத்திற்காக இந்தியா கடுமையாக பாடுபட்டு வருகிறது. பல்வேறு மக்களிடம் பேசியதில் இருந்து மத சுதந்திரம் குறித்து எதிர்மறை கருத்துகள் வரவில்லை.

ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புக்கு எதிராக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு இந்தியாவுக்கு உதவ தயார். இந்தியா வலிமையான நாடு, பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் வல்லமை அவர்களிடம் உள்ளது.

இறக்குமதி வரி தொடர்பாக இரு நாடுகளும் நியாயத்துடன் செயல்பட வேண்டும். உலகிலேயே அதிகமாக இறக்குமதி வரி விதிக்கும் நாடு இந்தியா, இது குறித்தும் பிரதமர் மோடியிடம் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

பாகிஸ்தான் குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசினேன்.  ஒவ்வொரு கதைக்கு இரு பக்கங்கள் உள்ளது.  எந்த ஒரு பிரச்சனையிலும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையே நெருடலான விஷயமாக காஷ்மீர் உள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரும் பிரச்சனைகளை இந்தியா சமாளிக்கிறது; இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய நான் தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story