5 ரூபாய்க்காக ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொலை; 5 பேர் கைது
5 ரூபாய் மீதம் கேட்ட ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொல்லப்பட்டதில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
புனே,
மராட்டியத்தின் மேற்கு புறநகரான போரிவலி பகுதியில் எரிவாயு நிரப்பும் நிலையம் ஒன்று உள்ளது. ராம்துலார் சர்ஜூ யாதவ் (வயது 68) என்பவர் தனது மகனை அங்கு வரும்படி தொலைபேசி வழியே கூறி விட்டு தனது ஆட்டோ ரிக்ஷாவை எடுத்து கொண்டு எரிவாயு நிரப்ப சென்றார்.
எரிவாயு நிலையத்தில் ரூ.205க்கு எரிவாயு நிரப்பி கொண்டு அங்கிருந்த ஊழியரான சந்தோஷ் ஜாதவ் என்பவரிடம் ரூ.500 கொடுத்து உள்ளார். ஆனால் அந்த ஊழியர் மீத தொகையான ரூ.295 தராமல் அவற்றில் ரூ.5 குறைத்து கொடுத்துள்ளார். மீதமுள்ள 5 ரூபாயை தரும்படி ராம்துலார் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், ராம்துலார் மற்றும் அவரது மகன் என இருவரையும் திட்டியுள்ளார். மற்ற ஊழியர்கள் அவர்களை அடித்து, உதைத்து உள்ளனர்.
இதில் மயங்கி விழுந்த ராம்துலார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார். எரிவாயு நிலையத்தில் பணியாற்றிய 5 ஊழியர்களை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
Related Tags :
Next Story