பிரதமர் மோடி-மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து


பிரதமர் மோடி-மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை    10 ஒப்பந்தங்கள் கையெழுத்து
x
தினத்தந்தி 27 Feb 2020 11:00 PM GMT (Updated: 27 Feb 2020 10:21 PM GMT)

பிரதமர் மோடி, மியான்மர் அதிபர் இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

புதுடெல்லி, 

மியான்மர் நாட்டு அதிபர் யு வின் மைன்ட், தன் மனைவி டாவ் சோ சோவுடன் 4 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்தார்.

நேற்று அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் மியான்மர் அதிபரையும், அவருடைய மனைவியையும் வரவேற்றனர்.

பின்னர், டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, மியான்மர் அதிபர் யு வின் மைன்ட் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

10 ஒப்பந்தங்கள்

இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியா-மியான்மர் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் பெரும்பாலானவை மியான்மர் நாட்டில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பானவை ஆகும். ஒரு ஒப்பந்தம், ஆள்கடத்தல் தடுப்பு தொடர்பானது.

மியான்மர் நாட்டின் ராகின் மாநிலம் சில ஆண்டுகளுக்கு முன்பு வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டது. துன்புறுத்தல்களால், ரோஹிங்கியாக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர்.

அந்த ராகின் மாநிலத்தில் இந்திய உதவியுடன் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த 3 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

பின்னர், மியான்மர் அதிபர், தன் மனைவியுடன் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

Next Story