சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு - 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை


சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய  மனு -  4 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை
x
தினத்தந்தி 2 March 2020 7:33 AM GMT (Updated: 2 March 2020 7:33 AM GMT)

சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை வரும் 4 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அரசியல்வாதிகள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் வரும் புதன்கிழமை விசாரிக்கிறது.

முன்னதாக,  டெல்லி உயர் நீதிமன்றத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய தலைவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கின் மீதான விசாரணையை ஒத்திவைத்தது. 


இந்த நிலையில், இதே விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன் முறையிட்ட மூத்த வழக்கறிஞர்   கோலின் கோன்சால்வேஸ்,  நாங்கள் உயர் நீதிமன்றம் சென்றோம். நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அதற்குள் நீதிபதி மாற்றப்பட்டார். இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.  இது மிகவும் அவசரமான விஷயம். தினமும் 10 என்ற விகிதத்தில் மக்கள் கொல்லப்படுகின்றனர்” என்றார். 

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே, வழக்கு ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் எதையும் உயர் நீதிமன்றம் கூறியதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், தீர்ப்பு அளிக்கப்படாத பட்சத்தில், எங்களால் என்ன செய்ய முடியும்? நாங்கள் அமைதியையே விரும்புகிறோம்.  எனினும், எங்களின் அதிகாரத்தில் சில வரையறைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். சில எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றை எங்களால் செய்ய முடியாது. இந்த வழக்கை புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம்.  நாம் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்” என்றார். 


Next Story