செல்போன்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக உயர்வு: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


செல்போன்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக உயர்வு: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 March 2020 1:31 PM GMT (Updated: 14 March 2020 10:14 PM GMT)

செல்போன்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாரமன் தலைமையில் 39-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலங்களின் நிதி மற்றும் வர்த்தகத்துறை மந்திரிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்ததும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

செல்போன்கள் மற்றும் அதன் குறிப்பிட்ட பாகங்கள் மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. விமானங்கள் பராமரிப்பு, பழுதுபார்த்தல், முற்றிலும் மாற்றியமைத்தல் பணிக்கான வரி விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

ரூ.2 கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்யும் வணிகர்கள் 2018, 2019-ம் நிதி ஆண்டுகளில் தாமதமாக கணக்கு தாக்கல் செய்ததற்கான அபராதம் ரத்து செய்யப்படுகிறது. ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. செலுத்துவதற்கு தாமதமானால் மொத்த வரிக்கு வட்டி விதிக்கப்படும்.

கைகளால் செய்யப்படும் மற்றும் எந்திரங்களால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு ஒரே விகிதமாக 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

2018-19-ம் நிதியாண்டின் கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும்.

ஜி.எஸ்.டி. நெட்வொர்க்கை வடிவமைத்துள்ள இன்போசிஸ் நிறுவனத்திடம், ஜி.எஸ்.டி. திட்டத்தை குறையின்றி செயல்படுத்துவதற்காக ஜூலை மாதத்துக்குள் திறமைவாய்ந்த கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும், வன்பொருள் திறனை அதிகரிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

இவ்வாறு நிர்மலா சீதா ராமன் கூறினார்.

Next Story