நாய், பூனை, வவ்வால்களை எல்லாம் ஏன் சாப்பிடுகிறீர்கள்? சீனா மீது சோயப் அக்தர் ஆவேசம்
நாய், பூனை மற்றும் வவ்வால்களை எல்லாம் ஏன் சாப்பிடுகிறீர்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் சீன மக்களை குறிப்பிட்டு கோபமுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
சீனாவின் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் உகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது விலங்கு உணவகம் ஒன்றில் இருந்து பரவியுள்ளது என முதலில் கூறப்பட்டது. எனினும், இது உறுதி செய்யப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்த வைரஸ் 140க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,436ஐ தாண்டியுள்ளது. உலகெங்கிலும் 145 நாடுகளில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 810க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி வரும் சூழலில் சீனாவில் பாதிப்பு குறைந்துள்ளது என அந்நாட்டு அரசு கூறி வருகிறது. இந்நிலையில், சோயப் அக்தர் வெளியிட்டு உள்ள வீடியோ ஒன்றில், கிரிக்கெட் ஆபத்தில் உள்ளது. உலகம் அதிக ஆபத்தில் உள்ளது. நம்மை சுற்றியுள்ள அனைத்தும் அதிர்ந்து போகும் வகையிலான விவகாரம் பற்றி நான் பேசுகிறேன். உலகிற்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து அவர், ஏன் நீங்கள் வவ்வால்களை சாப்பிட்டு, அவற்றின் ரத்தம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றை குடித்து, உலகம் முழுவதும் சில வைரஸ்களை பரப்புகிறீர்கள் என எனக்கு புரியவில்லை என கூறியுள்ள அவர், நான் சீன மக்களை பற்றி பேசுகிறேன் என கூறியுள்ளார். அவர்கள் உலகை பணயத்தில் வைத்துள்ளனர்.
நாய், பூனை மற்றும் வவ்வால்களை எல்லாம் நீங்கள் எப்படி சாப்பிடுகிறீர்கள் என உண்மையில் எனக்கு புரியவில்லை. உண்மையில் நான் அதிக கோபமுடன் இருக்கிறேன்.
சுற்றுலா துறை, பொருளாதாரம் பாதிப்படைந்து உள்ளது. ஒட்டுமொத்த உலகும் தனிமைப்படுத்தப்படும் சூழலை நோக்கி சென்று கொண்டுள்ளது. சீன மக்களுக்கு எதிரானவன் நான் இல்லை. ஆனால் விலங்குகளுக்கான சட்டத்திற்கு எதிரானவன். இது உங்களது கலாசாரம் என எனக்கு புரிகிறது. ஆனால், இது உங்களுக்கு இப்பொழுது பலனளிக்கவில்லை. அதனால் மனித குலம் பலியாகி வருகிறது.
சீனர்களை புறக்கணியுங்கள் என நான் கூறவில்லை. ஆனால் சில சட்டங்கள் இருக்க வேண்டும். நீங்கள் எவற்றையாவது சாப்பிடுவது என்பதோ, எல்லாவற்றையும் சாப்பிடுவது என்பதோ முடியாது என ஆவேசமுடன் பேசியுள்ளார்.
Related Tags :
Next Story