கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : கர்நாடகாவில் 7,8,9-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : கர்நாடகாவில் 7,8,9-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 15 March 2020 6:18 AM GMT (Updated: 15 March 2020 6:57 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கர்நாடகாவில் 7,8,9-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா,

சீனாவில் கோரதாண்டவமாடிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கர்நாடகத்தில் 5 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதற்கிடையில், கொரோனா வைரஸ் காரணமாக கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் பலியானதை தொடர்ந்து, பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் ஒரு வாரம் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், இரவு நேர விடுதிகள், கேளிக்கை விடுதிகளை மூட வேண்டும் என்று நேற்று முன்தினம் முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டு இருந்தார். குறிப்பாக கோடை கால சிறப்பு முகாம்கள், திருமண நிகழ்ச்சிகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், விளையாட்டு போட்டிகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சி நடத்துவதற்கும் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனா வைரஸ்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளின் தேர்வுகள் 2020 மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.

Next Story